வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)
வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில்[1]: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கும், தொழுதூருக்கும் இடையில் கோனேரி ஆற்றின் கிழக்கு கரையில் வாலிகண்டபுரம் என்னும் ஊரில் அமைந்து உள்ளது அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில். கல்வெட்டுக்களும், கலைநயம் மிக்க சிற்பங்களும் நிறைந்த சோழர்கால கோவில். இக்கோவிலில் கம்பீரமான தோற்றத்துடன் வானுயர எழுந்து நிற்கும் ஏழு நிலை கோபுரம் நம்மை மெய்சிலிர்க்க செய்து தெய்வீக அருள் உணர்வு பொங்க வரவேற்பதை காணலாம். இவ்வூரும், கோவிலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகை சிறப்புகளும் ஒருங்கே பெற்று திகழ்கின்றன.
தலபுராணப்படி படைப்பு கடவுளான பிரம்மா இவ்வூர் ஆற்றங்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார். எனவே இவ்வூர் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும், இறைவி பிரகன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் இவ்வூருக்கு பிரம்மபுரி என்ற பெயரும் இங்குள்ள நதிக்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தின் ஸ்தலவிருட்சம் மாவிலிங்கை மரம் ஆகும். ராமாயண காலத்தில் வானர அரசன் வாலி இவ்வூர் சிவனை வழிபட்டு அருள் பெற்றார். இதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றும், இறைவி வாலாம்பிகை என்றும் இங்கு ஓடும் ஆறு வாலி நதி, வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாபாரதத்துடன் இணைத்துப் புனைந்த ஸ்தலபுராணம்: மகாபாரத காலத்தில் அஞ்ஞாத வாசத்தின்போது பஞ்ச பாண்டவர்கள் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்தனர். இப்பகுதியை ஆண்ட விராட மன்னனிடம் அவர்கள் பணி செய்து வந்தனர். அப்போது ஒருநாள் விராட மன்னருடன் தர்மர் தாயம் விளையாடினார். விராட மன்னர் தவறான ஆட்டம் ஆடினார். இதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு கோபம் உண்டாகி சண்டை ஏற்படும் நிலை வந்தது. ஆனால் தங்களின் அஞ்ஞாத வாழ்க்கை பிறருக்கு தெரிந்து விடுமே என்பதால் பஞ்ச பாண்டவர்கள் இங்குள்ள ஆற்றில் நீராடி இறைவனை வழிபட்டு தங்களின் கோபம் தணிய பெற்றனர். பாண்டவர்களின் கோபத்தை போக்கிய நதி என்பதால் இவ்வாற்றுக்கு ‘கோனேரி ஆறு’ என்ற பெயர் ஏற்பட்டது. விராடன் ஆட்சி பகுதி என்பதை நினைவூட்டும் வண்ணம் ‘லாடபுரம்’ என்ற ஊர் வாலிகண்டபுரத்தின் மேற்கே அமைந்து உள்ளது.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார காலத்தில் இந்திரனின் அம்சமாக இவ்வுலகில் தோன்றியவன் வாலி. சிறந்த சிவபக்தன். கையிலாய மலையை தனது தோளினால் தூக்கிய வலிமை மிக்க ராவணனை தனது வால் நுனியில் கட்டிக்கொண்டு எட்டு திசைகளுக்கும் சென்று சிவ பூஜை செய்திட்ட பேராளன். அவனுடைய அரசாட்சி பகுதி கிஷ்கிந்தை என்று ராமாயணத்தால் அறிகிறோம். இது இன்றைய தமிழகத்தின் பகுதிகளை கொண்டது என்பது அறிஞர்களின் கருத்து. வாலி தன்னுடைய ஆட்சி காலத்தில் உருவாக்கிய நகரம் என்பதால் இவ்வூருக்கு வாலி கண்டபுரம் என்ற பெயர் ஏற்பட்டது[2].
இடைகாலம் பற்றிய ஸ்தலபுராண விவரங்கள்[3]: சங்க காலத்தில் ஆட்சி செய்த கண்டீரக்கோ என்ற குறுநில மன்னனின் ஆட்சி பகுதியாக கண்டீரம் என்ற பெயரில் இவ்வூர் விளங்கியது என்றும் அதுவே காலப் போக்கில் கண்டீரபுரம் என மருவி வாலியின் புராண தொடர்பால் வாலிகண்டபுரம் என ஆயிற்று என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கோவில் அம்மன் வாலாம்பிகை என்றும், பிரகன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். கோவில் வளாகத்தில் உள்ள அழகிய திருக்குளம் சரவண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள அழகான கட்டிடங்களில் ஒன்று இங்குள்ள குதிரை மண்டபம் ஆகும்.
இதனை நடராஜர் மண்டபம் என்று அழைக்கின்றனர். நடராஜர் சிற்பமும், பல்வேறு நாட்டிய சிற்பங்களும், யாளி வடிவங்களும், வீரர் ஏறி சவாரி செய்வது போல உள்ள குதிரை சிற்பங்களும் செதுக்கப்பட்ட இந்த மண்டபம் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் அமைக்கப் பட்டதாகும். இதுபோன்ற மண்டபங்களை ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களில் காணலாம். ஏழு நிலைகளுடன் வானுயர கம்பீரமான தோற்றத்தில் அமைந்து உள்ள ராஜகோபுரத்தில் ஐரோப்பியரின் உருவம் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. தன்னை பணிந்து போற்றி வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருகின்ற மகா வரப்பிரசாதியாக வாலீஸ்வரர் விளங்குகிறார் என்பதை மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டொன்றில் அறியலாம். இப்பகுதியை ஆண்ட சுத்தமல்லன் ஜெயங் கொண்ட சோழ வன்னாடுடையான் என்பவருக்கு பிள்ளைப்பேறு இல்லை. அவர் வாலீசுவரரை மனம் உருக வேண்டி தனக்கு பிள்ளை வரம் அருளும்படி வேண்டினான். அவ்வாறு தனக்கு பிள்ளை பிறந்தால் இறைவனுக்கு தங்கத்தால் பட்டம் செய்து சாத்துவதாகவும் நேர்ந்து கொண்டார். அவனது பிரார்த்தனை பலித்து இறைவன் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தான் நேர்ந்துகொண்டபடியே பொன்னால் பட்டம் செய்து அளிக்க அதற்கு ஈடாக வருமானம் தருகின்ற புகழறைப்பூண்டி என்ற ஊரை இறையிலியாக கொடுத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இன்றும் பிள்ளை பேறு இல்லாதவர்கள், திருமண தோஷம் உள்ளவர்கள் வாலீசுவரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு தங்கள் மனக்குறைகள் நீங்க பெற்று மகிழ்ச்சியுடன் செல்வதை காணலாம்.
வாலிகண்டபுரம் – தினமலர் விவரங்கள்: ராஜகோபுரத்தின் முன்பாக இடதுபுறம் நடராஜர் மண்டபம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானின் திருவுருவம். மண்டபத் தூண்களில் மயக்கும் சிற்பங்கள் கி.பி 1514 ல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம். ராஜகோபுரத்துக்கு நேரேதிராகவும், நடராஜர் மண்டபத்துக்கு தென் எதிராகவும் சிறிய கல் மண்டபத்தில் பாலகணபதி. ராஜகோபுரத்திருவாயில் தூண்களில் இருபுறமும் எதிர் எதிராக எழிலாக வடிவுருவம் தாங்கி நிற்கின்றனர் இரண்டு எழில் அரசிகள். கோபுரத்தின் உட்புறம் வலது பக்கமாக ஈசான்ய மூலையில் சரவண தீர்த்தம் எனப்படும் திருக்குளம். முன்னொரு காலத்தில் ஆண்டுக்கொருமுறை இதில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. திருக்குளத்தூணில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம் இங்கு மட்டுமே என்று எண்ணிட வேண்டாம். திருக்கோயிலில் ஆங்காங்கே மண்டபத் தூண்களில் வாலி சார்ந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் பற்பல தூண்களில் வாலி மயமாகவே காட்சியளிக்கின்றன வெவ்வேறு வகை சிற்பங்கள். மண்டபத்தில் திருநந்திதேவர் சதா சர்வகாலமும் வாலீஸ்வரனைக் கண்டுருகும் காரணத்தால் அமைதி தவழ வீற்றிருக்கிறார். இத்திருக்கோயிலில் மூன்று இடங்களில் முறையே மூலஸ்தானத்தின் எதிரே அடுத்தடுத்து பின்தொடரும் வரிசையாக பாலநந்தி, வாலிபநந்தி, யவ்வன நந்தி என அமையப்பெற்றுள்ளனர். மகா மண்டபத்தில் உள்ளே மேற்கு நோக்கி பைரவர் இடுப்பிலே நாகப்பாம்பை அரைஞான் கயிறாகவும், மண்டையோடுகளை பூணுலாகவும் அணிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். அர்த்தமண்டப வாசலையொட்டி வலதுபுறம் கல்யாண விநாயகர் வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி எதிரே பால நந்தி[4].
பொருள் மற்றும் சேவைகளைக் காக்க வீரர்களை பணிக்கு வைத்துக் கொண்டது: சோழர் காலத்தில் வணிகர்கள், தங்களைக் காத்துக் கொள்ள வீரர்களாயினர் (merchant warriors) அல்லது வீரம் கொண்ட வணிகர்களை ஊக்குவித்தனர் அல்லது தனிப்படையினை வைத்துக் கொண்டனர். அதாவது இடைக்காலத்தில் முகலாயர், ஐரோப்பியர் முதலியோரதது ஊடுருவல்களால் வணிக-நேர்மை, வியாபார-தர்மம், பொருளாதார நாணயம் முதலியை இல்லாமல் போய்விட்டது. அனர்களுக்கே உரித்தான கடற்கொள்ளை என்ற முறையினால், அயல்நாட்டு வாணிகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்நிலையில் அவர்கள் தற்காப்பிற்காக, பொருட்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு / சொந்த படையினை வைத்துக் கொண்டது அக்காலத்தின் தேவையானது. அத்தகைய அமைப்புமுறை வாலிகண்டபுரத்தில் இருந்தது அங்குள்ள கோவிலின் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகின்றது.
விளக்குகளை தானமாகக் கொடுத்த வணிகக்குழுமத்தினர்: ஆதித்ய சோழன் – 1 (871-907 CE) மற்றும் பராந்தகன் (907-955 CE) காலத்தில் இருந்த “மணிகிராமத்தினர்” என்று குறிக்கப்பட்ட வணிகக்குழுமத்தினரின் சொந்த ஊராக வாலிகண்டபுரம் இருந்தது. பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்னமே இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வாலி மற்றும் ராமாயண தொடர்பு சிற்பங்கள் இருப்பதனால், அவ்வூர் ஒரு வியாபார ஸ்தலம் மற்றும் முக்கிய நகரம் என்பதனை அறியலாம் என்றும் அந்த வணிக-சமூதய-குழுமத்தை “நகரம்” என்று கென்னத் ஹால் போன்ற இக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்[5]. அதாவது வியாபார ரீதியில், ஒரு வணிக ஸ்தலாமக முக்கியம் பெற்றிருந்தது என்று கூறுகின்றனர். மக்கள் இக்கோவிலுக்கு வேண்டியவற்றை, குறிப்பாக விளக்கு கொடுக்கும் முறையினை ஏற்படுத்தி வைத்தனர். பொதுவாக விளக்கெரிய / மூன்று வேலைகளிலும் விளக்கெரிய தானம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் பலவுள்ளன. ஆனால், இங்கு விளக்குகளே கொடுக்கப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இன்னும் பல விக்கிரங்கள் காணப்படுகின்றன.
இவையெல்லாம் இக்கோவிலுடையதா அல்லது வேறு கோவிலுடையதா என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
19-05-2015
[1] http://www.maalaimalar.com/2013/07/22105127/valeeswarar-temple.html
[2] கு. அரவிந்த்குமார் (நமணசமுத்திரம்), வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில்
– ஸ்தல வரலாறு, மாலைமலர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 22, 2013, 10:51 AM IST
[3] மாலைமலர், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில் – ஸ்தல வரலாறு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 22, 2013, 10:51 AM IST.
[4] http://temple.dinamalar.com/New.php?id=1903
திருக்கோயிலின் அற்புத வரலாற்றை அறியவைத்ததற்கு நன்றி. அழகிய கோபுரமும், பின் அதிலுள்ள சுவாமிகளையும் காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.